புதன், 6 மே, 2020

Oh My கொரொனாவே

அன்புள்ள பக்தா,

நீ நேற்று என்னிடம் வேண்டியது புலம்பியது நன்றாகக் கேட்டது. கனவில் வந்து பதில் சொல்வது old style, நானும் மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்ப ஆரம்பித்து நாளாகிவிட்டது.

கொரொனா கிருமியால் ரொம்பவே பாதிக்கபட்டு இருப்பதாகச் சொன்னாய். அத்தனையும் என் செயல் என என் மீதும் பழி சுமத்தினாய். ஒன்றை நீ சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். இந்த உலகத்தையும் அதில் வாழும் ஜீவராசிகளையும் படைத்தது நானாக இருந்தாலும், அதை தான் வாழும் இடமாகவே இருக்கவேண்டும் என நினைப்பது மனித இனம் மட்டுமே.

நினைத்துப் பார், நானா மனிதனை கண்டதையும் உண்ணச்சொன்னேன்? அக்கிருமி வாழும் இடம் வேறு. அது வெளவால் வயிற்றில் வாழ படைக்கப்பட்டது. அதை நீ உண்டு பின் என்னை குற்றம் சொல்லி என்ன பயன்? 



உலகம் மாறிவிட்டதாகச் சொன்னாய். ஆமாம், அதுவும் நல்லதுக்கே. காற்று சற்று தூய்மையாயிற்று, கடலும் வானும் தன் பங்கிற்கு தூய்மையானது. இந்த உலகமும் பஞ்ச பூதங்களூம் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொது என்னும் விதியை மனிதன் புரிந்துகொள்ள இது ஒரு சந்தர்ப்பம்.

மேலும் உன் வாழ்கையை மெம்படுத்த எத்தனை ஒடியிருப்பாய். உன் கால்களுக்கும் ஓய்வு வேண்டாமா? லட்சாதிபதிகளும் கோடீஸ்வரன்களும் தன் பணத்தை வைத்து என்ன செய்ய முடிந்தது? அடங்கி ஒடுங்கி வீட்டில் ஒரு ஓரமாக அமர்ந்து இயற்கையை மிஞ்சிய சக்தி வேறில்லை என உணரத்தானே முடிந்தது?

Sometimes the bad things that happen in our lives put us direction on the path to the best things that will ever happen to us. 

தொழில் சேதமடைந்தது என அழுதாய். உப்பு விற்க போனால் மழை பெய்யுது, மாவு விற்க போனால் காத்தடிக்குது என்று புலம்புவதை விட்டு விட்டு வாழ்க்கையின் போக்கிற்கு உன்னை தயார் செய்ய கற்றுக்கொள்.

கடைசியாக, இப்படி வாழ்ந்து என்ன செய்ய செத்து ஒழிவதே மேல் என புலம்பினாய். செத்தொழிந்து என்ன செய்யப்போகிறாய், வாழ்ந்து தான் பாரேன்.

ஆம், உலகம் முன்போல் இருக்காது. ஆனால், இதுவும் கடந்து போகும்.

என்றும் உன்னுடன்,
உன் கடவுள்